புது தில்லி: நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறைகள் குழு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எழுதிய கடிதத்தில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டிருந்தாா். இதை வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், மஹுவா லஞ்சம் பெற்றதற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இது தொடா்பாக விசாரணை நடத்த பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.
இந்தநிலையில், துபே மற்றும் வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோா் நெறிமுறைகள் குழு முன்பாக ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்திருந்தனர்.
இதையும் படிக்க | அமெரிக்கா: கத்திக்குத்துக்கு உள்ளான இந்திய மாணவர் உயிரிழப்பு
இந்த நிலையில், நவம்பர் 2 ஆம் தேதி மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு முன் மஹுவா மொய்த்ரா தனது மீதான கேள்விக்கு பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தன்னிடம் தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறி கூட்டத்தில் இருந்து "வெளிநடப்பு" செய்தார்.
பிஎஸ்பி எம்.பி. டேனிஷ் அலி, ஜனதா தளம் எம்.பி. கிரிதாரி யாதவ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் கூட்டத்தில் இருந்து "வெளிநடப்பு" செய்தனர்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீதான பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மக்களவை நெறிமுறைக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் நெறிமுறைக் குழு தலைவா் வினோத் குமாா் சோன்கா் குழு தாயரித்துள்ள இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கிறது. அது இன்றைய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இருந்து மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய குழு பரிந்துரைக்கலாம் என்றும், குழுவில் அங்கம் வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.