பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் ஒருவர் புதன்கிழமை இரவு காயமடைந்தார்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராம்கர் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கம்போல் நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென்று பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 28 வயது இந்திய எல்லைப் படை வீரர் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
காயமடைந்த வீரரை மீட்டு ராம்கர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப் படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலால் ராம்கர் பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் இன்று காலை பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.