நிதீஷ் குமார் மீது குற்றம் சாட்டும்போது, தங்கள் கட்சி தலைவர்கள் பற்றியும் பாஜக பேச வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) செய்தித் தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ இதுகுறித்து பேசியதாவது: “எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒரே விஷயத்தில் இருவேறு நபர்களுக்கு, இருவேறு அளவுகோல்களை பயன்படுத்தக் கூடாது.
நிதீஷ் குமாரின் பேச்சு குறித்து அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால் பாஜகவினர் இதனைப் பெரிதுபடுத்தி பிரச்சினையாக்கி வருகின்றனர். பெண்களை அவமதிப்பதே பாஜகவினர்தான். அவர்கள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வந்துள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பலமுறை தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராகப் பேச பாஜகவுக்கு உரிமை இல்லை, ஏனெனில் பாஜக தலைவர்களுக்கு பெண்கள் மீது எப்போதும் மரியாதை இருந்ததில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நவம்பர் 7-ஆம் தேதி ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், “பிகார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் முன்பு 4.3 சதவீதமாக இருந்தது, இப்போது 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கடந்த ஆண்டு அறிக்கையைக் குறிப்பிட்டு பேசினார். மேலும், கருவுறாமல் இருப்பதற்கு படித்த பெண்களுக்கு தெரியும்” என்று அவர் பேசியது சர்ச்சையானது.
மக்கள்தொகை அதிகரித்து வருவது குறித்தும், பாலியல் கல்வி பற்றியும் நிதீஷ் குமார் பேசியது எதிர்க்கட்சியினரால் தவறாக மாற்றப்பட்டு விட்டதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.