கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொலி வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தில்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது.
இப்போது தில்லி காவல்துறை அந்தப் போலிக் காணொலியை, வலைதளத்தில் பகிர்ந்த நபரின் சமூக வலைதளக் கணக்கின் யூஆர்எல் தரவுகளை வழங்குமாறு மெட்டா நிறுவனத்திடம் கேட்டுள்ளது
இதுகுறித்து அதிகாரி ஒருவர் 'ராஷ்மிகாவின் போலி காணொலி பரவலாக பகிரப்பட்டுள்ளது. அது எந்தக் கணக்கிலிருந்து வலைதளத்தில் முதன்முதலாக பகிரப்பட்டது என்பதைக் கண்டறிவதற்காக மெட்டா நிறுவனைத்தை தொடர்புகொண்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
மேலும் போலி விபரங்களைத் தயாரித்தல் (சட்டப்பிரிவு 465), நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலி விபரங்களைப் பகிர்தல் (சட்டப்பிரிவு 469) ஆகிய குற்றங்களின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தில்லி சிறப்பு காவல்துறை பிரிவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66சி மற்றும் 66இ ஆகிய பிரிவிகளின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : திகார் சிறையில் இருந்து வெளிவந்தார் மணீஷ் சிசோடியா!
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே தில்லி மகளிர் ஆணையம் இந்த காணொலி தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காணொலி செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் - இந்தியப் பெண் ஒருவரது காணொலியில் அவரது முகத்தை செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா முகமாக மாற்றியுள்ளனர்.