உத்தரகாசி மாவட்டத்தில் சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்ட பகுதிக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி.
யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதில் சுரங்கப்பாதைக்குள்ளே சுமார் 40 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது: “நான்கரை கிலோ மீட்டருக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் 40 தொழிலாளர்கள் உள்ளே மாட்டிக் கொண்டனர். நாங்கள் பைப் மூலமாக அவர்களுக்கு உணவை அனுப்பி வைத்துள்ளோம். உள்ளே எந்தப் பிரச்சினையும் இல்லை.
நிபுணர்கள் பிளான் ஏ, பிளான் பி மற்றும் பிளான் சி என பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.
உள்ளே இருப்பவர்களிடம் தொடர்பில் இருக்கிறோம். ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய 35 மீ அளவிலான இடிபாடுகளை அகற்ற வேண்டியுள்ளது என நிபுணர்கள் கூறியதாக புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.