உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள சேடகான்-மிடார் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த பிக்-அப் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர்.
பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது காலை 8 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக நைனிடால் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரஹலாத் நாராயண் மீனா தெரிவித்தார்.
எதிர்திசையில் தவறாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிடாமல் இருக்க முற்பட்டபோது வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தது.
இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின்பு உயிரிழந்தனர். இதில் ஒரு தம்பதி மற்றும் அவர்களின் குழந்தை என ஒரு குடும்பமே பலியானதாக எஸ்எஸ்பி தெரிவித்தார்.
இதில் உயிரிழந்தவர்களுக்கு உத்தர்கண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.