வாராணசியின் ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வறிக்கையை தயார் செய்ய நீதிமன்றத்திடம் மேலும் 15 நாள்கள் கால அவகாசம் கோரியுள்ளது தொல்லியல் துறை.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதியின் வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பான வழக்கில் நவம்பா் 6-ஆம் தேதிக்குள் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்திய தொல்லியல் துறை(ஏஎஸ்ஐ) தனது ஆய்வை நிறைவு செய்ததாக வாராணசி நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும் இதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நவம்பா் 17 வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு தொல்லியல் துறை கேட்டுக்கொண்டதன்பேரில் வாராணசி மாவட்ட நீதிபதி ஏ.கே. விஸ்வேஷ் அவகாசம் அளித்து உத்தரவைப் பிறப்பித்தாா்.
இந்நிலையில் ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வறிக்கையை தயார் செய்ய மேலும் 15 நாள்கள் கால அவகாசம் வழங்குமாறு வாராணசி நீதிமன்றத்தில் தொல்லியல் துறை கோரியுள்ளது.
ஆய்வறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க, தொடர்ந்து நான்காவது முறையாக கால நீட்டிப்பு செய்யுமாறு தொல்லியல் துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.