உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பாஜக நிகழ்வு போல் மாற்ற முயற்சிக்கின்றனர் என்று சிவசேனை கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இன்று (நவம்பர் 19) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடந்து சிவசேனைக் கட்சியின் (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் கூறும்போது, “நரேந்திர மோடி பந்துவீசி, அமித் ஷா பேட்டிங் செய்வதைப் போல உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஒரு காவி கட்சியின் நிகழ்வு போன்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் பாஜகவினர்.
கிரிக்கெட் விளையாட்டில் அரசியலைக் கொண்டு வரவேண்டிய அவசியமில்லை. ஆனால் அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் அரசியல் கலக்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஷமியால் ஆனது: இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறார்?
பிரதமர் மோடி கலந்துகொண்டதால்தான் இந்தியா உலகக்கோப்பையை வென்றது என பாஜகவினர் கூறுவதற்கும் வாய்ப்புள்ளது. அவர்கள் அப்படிக் கூறினாலும் எனக்கு ஆச்சரியமில்லை. இந்த நாட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காண பிரதமர் நரேந்திரமோடி வருகை தரவுள்ளதாக சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போது மோதிவரும் இந்திய அணி இதுவரை 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டு முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு ஐந்து முறை உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.