தலைநகர் தில்லியின் காற்றின் தரம் “மிகவும் மோசம்” என்ற பிரிவிலிருந்து ”தீவிரம்” என்ற நிலைக்கு மீண்டும் சென்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காற்றின் தரம் சற்று மேம்பட்டிருந்த நிலையில், இந்த ஒருவார காலத்தில், மெல்ல காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. அந்தவகையில், இன்று (நவ.24) காலை நிலவரப்படி தில்லியில் காற்றின் தரக் குறியீடு 401 ஆகப் பதிவாகியுள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.19) நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு 301 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், கடந்த 5 நாள்களில் 100 புள்ளிகள் உயர்ந்து, காற்றின் தரம் தீவிரம் என்ற நிலையை எட்டியுள்ளது.
தில்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை, தில்லி நகரப் பகுதிகளுக்குள் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நுழையத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் காரணமாக, காற்றின் தரம் சற்று மேம்பட்டது.
இந்தநிலையில், தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விதிக்கப்பட்டடிருந்த பல்வேறு தீவிர கட்டுப்பாடுகளை, கடந்த சனிக்கிழமை முதல், மத்திய அரசு தளர்த்தியது. இந்த கட்டுப்பாடுகள் தற்போது விலக்கப்பட்டிருப்பதால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.
தில்லியின் அண்டை நகரங்களான காஸியாபாத்(386), குருகிராம்(321), கிரேட்டர் நொய்டா(345), நொய்டா(344) மற்றும் பரிதாபாத்(410) ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் “மிக மோசம்” என்ற பிரிவிலிருந்து ”தீவிரம்” என்ற நிலைக்கு மீண்டும் சென்றுள்ளது.
அடுத்த ஒரு வார காலத்துக்கு, காற்றின் தரம் தீவிரம் என்ற நிலையிலேயே நீடிக்கும் என்று புனேவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லி அரசு மற்றும் கான்பூர் ஐஐடி இணைந்து நடத்திய ஆய்வில், வாகனங்களில் இருந்து வெளியான புகையால் தில்லியில் நேற்று (நவ. 23), 38 சதவிகிதம் காற்று மாசுபாடு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் வேளான் கழிவுகளை எரித்ததால், தில்லியில் நேற்று (நவ. 23), 21 சதவிகித காற்று மாசு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.