மும்பை தாக்குதல் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சிலர் கடல் வழியாக ஊடுறுவி, 2008 ஆம் ஆண்டு நவ. 26 ஆம் தேதி, மும்பையில் திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர். இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

மும்பையில் தாஜ் ஓட்டலை குறிவைத்து, பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். அதில் 18 பாதுகாப்புப் படை வீரர்களும் அடங்குவர். இந்த பயங்கரவாத தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தின் 15-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ. 26) அனுசரிக்கப்படுகிறது. இந்தநிலையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

மும்பை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதிவிட்டுள்ளதாவது, “மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நம் தேசம் வலியுடன் நினைவுகொள்கிறது.

வீர ஆன்மாக்களை கௌரவிப்பதில், நாம் இறந்தவர்களின் குடும்பங்களோடு துணை நிற்கிறோம்.

தாய்மண்ணுக்காக உயிர்நீத்த வீரம் மிகுந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன்;  அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவு கூர்கிறேன். எந்தவொரு பகுதியிலும், அனைத்துவித பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு போரிடுவதாக,  நாம்  எடுத்துக்கொண்ட சபதத்தை  அனைவரும் மீண்டும் புதுப்பிப்போம்”  என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மும்பை தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை, ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பேசினார்.

இன்று (நவ. 26) ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நவ. 26 ஆம் தேதியை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. இதே நாளில் தான், நாட்டில் மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. மும்பையையும் ஒட்டுமொத்த தேசத்தையும் பயங்கரவாதிகள் ஆட்டம் காணச் செய்தனர். எனினும், இந்தியாவின் திறமையால் அந்த தாக்குதலில் இருந்து மீண்டோம்.இப்போது நாம் முழு தைரியத்துடன் பயங்கரவாதத்தை ஒடுக்கி வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com