2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றின்போது பிபிஇ கிட் எனப்படும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனா பெருந்தொற்றின்போது மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை இயக்குநர், வருமான வரித்துறை இயக்குநர் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுவேந்து அதிகாரி எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “கரோனா பெருந்தொற்று காலத்தில் அதனை எதிர்த்து போராடுவதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. அந்த நிதியில் மேற்கு வங்க சுகாதார அமைச்சகம் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தது. அதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி விசாரணை அமைப்புகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன். மிக விரைவில் அமலாக்கத்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும் எனத் தெரிகிறது.” என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 நவம்பர் மாதம் வரை மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக சுவேந்து அதிகாரி பணியாற்றினார்.
2020 டிசம்பர் மாதம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, அதே மாதமே பாஜகவில் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.