புதுதில்லி: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தவா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 59 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து குன்னூர் மலைப்பாதையில் சரிந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில் இறந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க | பரந்தூரில் ஐஐடி குழு ஆய்வு: பொதுமக்கள் எதிர்ப்பு!!
விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையான நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.
விபத்தில் இறந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.