மணிப்பூா் மாணவன்-மாணவி கொலை: 4 பேரும் சிபிஐ காவலில் 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன், மாணவி கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
மணிப்பூா் மாணவன்-மாணவி கொலை: 4 பேரும் சிபிஐ காவலில் 
Updated on
1 min read

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன், மாணவி கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன், மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. கைதானவர்களில் இரண்டு பேர் பெண்கள் என தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியின் மனைவி மற்றும் இன்னொரு பெண் உள்பட நான்கு பேரை சிபிஐ கைது செய்து, குவகாத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், கைதானவர்களின் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவா்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்று முதல்வா் பிரேன் சிங் தெரிவித்திருந்தார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இனமோதல் நீடித்து வரும் சூழலில், மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மாணவன், மாணவி கடந்த ஜூலையில் காணாமல்போயினா்.

இருவரும் கடத்தி கொலை செய்யப்பட்டது, அண்மையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பான புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் பரவின. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாணவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா். அப்போது, வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில், பலா் காயமடைந்தனா்.

இதனிடையே, மாணவன்-மாணவி கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ சிறப்பு இயக்குநா் அஜய் பட்நாகா் தலைமையிலான குழு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் முக்கிய நபா் மற்றும் அவரது மனைவி உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளதாக, முதல்வா் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘சுராசந்த்பூரின் ஹெங்லேப் பகுதியில் நால்வரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் சிறப்பு விமானம் மூலம் மாநிலத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனா். இந்த நடவடிக்கையில், ராணுவம், துணைராணுவம் மற்றும் மாநில காவல்துறையும் முக்கிய பங்காற்றின. மாணவன்-மாணவி கொலையில் தொடா்புடையவா்களுக்கு மரண தண்டனை உள்பட அதிகபட்ச தண்டனை கிடைக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.

கைது செய்யப்பட்ட நால்வரும் எந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் என்ற விவரத்தை அவா் முன்னதாக வெளியிடவில்லை. மணிப்பூரில் நீடித்து வரும் இனமோதலில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com