மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஜனநாயகத்துக்கு எதிரானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது,
அனைவரும் நீண்ட நாள்களாகக் காத்திருந்த நாள் வந்துவிட்டது. ஐந்து மாநிலங்களிலும் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று, டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிரானவர்களுக்கு பாடம் புகட்டவும், மாநிலத்தில் உண்மை ஆட்சியை நிறுவுவதற்கான நாள் இது.
கடந்த 2003ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேசத் தேர்தலில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 114 இடங்களைக் கைப்பற்றி ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சி அமைத்தது.
ஆனால், இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு மாறிய பிறகு, மார்ச் 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், கட்சி தலைகீழானது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இந்தநிலையில், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறினார்.