கம்பியில்லா தொழில்நுட்பம் சார்ந்த பட்ட மேற்படிப்புக்கான புதிய சேர்க்கையைத் தொடங்கியுள்ளது கான்பூர் ஐஐடி.
புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி கான்பூர், கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல்வேறு வகையிலான பட்ட மேற்படிப்புகளை இணைய வழியாக நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஐஐடி கான்பூரின் மின்பொறியியல் துறை சார்பில் `அடுத்த தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்ப’ முதுநிலை படிப்புக்கான (eMasters in Next Generation Wireless Technologies) சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.
இந்தப் படிப்பில் சேர்வதற்கு கேட் (GATE) மதிப்பெண் வேண்டியதில்லை. உலகின் தலைசிறந்த ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களால் நடத்தப்படும் இந்தப் பாடத்திட்டங்களை மாணவர்கள் ஒன்று முதல் மூன்று வருடங்களுக்குள் நிறைவு செய்வதற்கான தளர்வையும் ஐஐடி அளித்துள்ளது.
பல நாடுகள் வெற்றிகரமாக 5ஜி அலைவரிசையை செயல்படுத்தி வருகிற வேளையில் தற்போது, 6ஜி அலைவரிசை குறித்து ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாட்டில், 5ஜி தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. அதற்கு, திறன் வாய்ந்த தொழிலாளர்கள் பற்றாக்குறையும் முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே பணியில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகிகள் உட்பட இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள விரும்புபவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஐஐடியின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.