
போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப விளையாட்டு வீரர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.10) சந்தித்தார். விளையாட்டு வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர்,
நான் பெருமையடைகிறேன். ஆசிய விளையாட்டுகளில் நீங்கள் சிறப்பான பங்களிப்பை இந்தியாவுக்காக அளித்துள்ளீர்கள். வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வழங்கியுள்ளனர். இந்திய மகள்களின் தகுதியை இது காட்டுகிறது. நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன். உங்களின் உழைப்பாலும், முயற்சியாலும், சாதனையாலும் இந்தியா முழுவதும் கொண்டாட்ட மனநிலை ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டில் ஏராளமான திறமைசாளிகள் உள்ளனர். ஆனால், சில தடைகளால் அவர்களின் திறமை பதக்கங்களாக மாறாமல் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் போதையில்லா இந்தியா என்ற செய்தியைப் பரப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஆசிய விளையாட்டில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை இந்தியா வென்றது. ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல்முறையாக நூறு பதக்கங்களுக்கு மேல் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.