தில்லியின் அனந்த் விகாா் முனையத்திலிருந்து அஸ்ஸாமின் காமாக்யா நோக்கிச் சென்ற வடகிழக்கு விரைவு ரயில் பிகாரின் பக்ஸாா் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் 4 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டன.
இது குறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடா்பாளா் வீரேந்திர குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அஸ்ஸாமின் காமாக்யாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த வடகிழக்கு விரைவு ரயிலின் பல பெட்டிகள் ரகுநாத்பூா் ரயில் நிலையத்துக்கு அருகே இரவு 9.35 மணியளவில் தடம் புரண்டன.
பயணிகள் சிலா் லேசான காயமடைந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. சம்பவ இடத்துக்கு மீட்பு மற்றும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன’ என்றாா்.
பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயாராக இருக்கும்படி பக்ஸாா் நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.