பில்கிஸ் பானு வழக்கில் உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (அக். 12) ஒத்திவைத்தது. 

2002 குஜராத் கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மூன்று வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.

குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர். 

இதுகுறித்து குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், “11 குற்றவாளிகளின் நடத்தை நன்றாக இருப்பதாகவும், நன்னடத்தை அடிப்படையில் அவர்களை விடுவித்ததாகவும்” தெரிவித்துள்ளது. 

குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பல்வேறு மனுக்களின் மீதான தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com