கரக்பூர்: கரக்பூர் ஐஐடி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மாணவர் கிரண் சந்தரா, இளநிலை மின் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் சந்தராவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், சக மாணவர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது சந்தரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை மாணவர்கள் பார்த்துள்ளனர்.
உடனடியாக விடுதி காவலர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளரிடம் பேசிய சந்தராவின் தந்தை, ஐஐடி மாணவர்களிடையே ஏன் இவ்வளவு மன அழுத்தம் உள்ளது. நான்காம் ஆண்டு ஆய்வறிக்கை காரணமாக சந்தரா மன அழுத்தத்தில் இருந்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஐஐடி கரக்பூரில் கடந்தாண்டு அக்டோபர் 14-ஆம் தேதி அசாமை சேர்ந்தை ஃபைசான் அகமத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஐஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].