ககன்யான் சோதனை தாமதமாக நடைபெறும்: இஸ்ரோ அறிவிப்பு

வானிலை காரணமாக தாமதமாக விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ககன்யான் சோதனை தாமதமாக நடைபெறும்: இஸ்ரோ அறிவிப்பு
Published on
Updated on
1 min read


மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தாமதமாக சனிக்கிழமை (அக். 21) காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 

முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானில் பனிமூட்டம், மேகக்கூட்டங்கள் காரணமாக சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கு 5 வினாடிகளுக்கு முன் சோதனை நிறுத்தப்பட்டது. 

மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனை டிவி - டி1 ராக்கெட் மூலம் தரையில் இருந்து 17 கிலோ மீட்டா் தொலைவு வரை அனுப்பி, மீண்டும் அதைப் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டுவந்து வங்கக் கடலில் இறக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபடும். பின்னா், கடலிலிருந்து கலன் மீட்கப்படும்.

பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கிலோ மீட்டா் உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாகப் பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்பட உள்ளது.

கடல் நீரில் கலன் விழுந்தவுடன் இந்திய கடற்படையின் சிறப்புக் கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பா். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, விண்ணுக்கு மனிதா்களைப் பாதுகாப்பாக அனுப்பும் நுட்பம் உறுதி செய்யப்பட உள்ளது.

ககன்யான் திட்டத்தின் மூலம் தரையில் இருந்து 400 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வருவதற்கான இந்தியாவின் திறனை நிரூபிப்பதே இந்த சோதனை திட்டம்.

ககன்யான் திட்டம் மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்தும் வகையில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரை 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 நாள் பணிக்காக செலுத்தி, இந்திய கடல் நீரில் தரையிறக்கி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவருகிறது. 

இந்த திட்டம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை ஏற்றி விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியாவை உருவாக்கும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது சாத்தியம் என்பதை நிரூபிக்கும் இந்தியாவின் முயற்சியில் இந்த பணி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com