திமாபூர்: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரிக்காக தமிழகம் போராடி வரும் நிலையில், மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து.
அக்டோபர் இரண்டாம் வாரத்தில், நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில், மிக ரம்மியமான பின்னணியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
நாகாலாந்து மாநில மக்களின் நீண்டநாள் கனவானது இதன் மூலம் நிறைவேறியிருக்கிறது. தற்போது, மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது.
மருத்துவக் கல்வியின் தேவையை நிறைவேற்றுவதுடன் நாகாலாந்து மக்களின் சுகாதார பாதிப்புகளையும் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. எப்படி இருந்த நான்.. காஸாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு சகோதரி மாநிலங்களில் நாகாலாந்தும் ஒன்று. நாகாலாந்து, கடந்த 1963ஆம் ஆண்டு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைநகரம் கோஹிமா. இதில் 12 மாவட்டங்கள் உள்ளன. நாகாலாந்து மாநிலம் முழுவதும் ஒரே மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டது.
இந்த மாநிலத்தில் பட்டியல் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து என்பது மிக மிகக் குறைவு. வெறும் 15 கிலோ மீட்டர் நீளத்துக்குள்தான் இருப்புப் பாதை உள்ளது. இங்கு திமாபூரில் ஒரே ஒரு விமான நிலையமும், ரயில் நிலையமும் அமைந்துள்ளது. மலைப்பகுதி என்பதால், சாலைப் போக்குவரத்தும் பெரிய அளவில் இல்லாததால், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருக்கும்.
இதையும் படிக்க.. கிரெடிட் கார்டில் செலவிடுவது குறைந்திருக்கிறதா?