தெலங்கானாவில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மேடாக் தொகுதி எம்.பி. பிரபாகர் ரெட்டியை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்காக, தெலங்கானாவின் தௌலதாபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரபாகர் ரெட்டியை அடையாளம் தெரியாத நபர் கை குலுக்கச் செல்வது போல நெருங்கிச் சென்று, தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், திடீரெனக் குத்தினார்.
இதையும் படிக்க.. கண்ணீரைத் துடைக்க ஆப்கனிலிருந்து வரும் வெங்காயம்
இதில் வயிற்றில் கத்திக்குத்து காயமடைந்த பிரபாகர் ரெட்டியை உடனடியான அருகில் இருந்தவர்கள் காருக்குள் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபாகர் ரெட்டியை கத்தியால் குத்திய நபரை, அங்கே இருந்த பிஆர்எஸ் தொண்டர்கள் சரமாரியாக அடித்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து, அந்த நபரை மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில், கத்தியால் குத்தியவர் ராஜு என்பதும், அவர் யூடியூப் செய்தியாளர் என்றும், தெலங்கானாவில் தலித்களுக்கான திட்டத்தில் தனது பெயரை சேர்க்குமாறு ராஜூ கேட்டும், பிரபாகர் ரெட்டி செய்யவில்லை என்றும், அதனால் கோபத்தில் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பிரபாகர் ரெட்டி விரைவாகக் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது.