இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், முகநூலில் மலர்ந்த காதலுக்காக பாகிஸ்தான் சென்று தனது காதலரைக் கரம்பிடித்துள்ளார்.
திருமணத்தை முடித்துக்கொண்டு குழந்தைகளைப் பார்ப்பதற்காக கணவரோடு இந்தியாவுக்குத் திரும்பவுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவருக்கு, அரவிந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 15 வயதில் மகளும் 6 வயதில் மகனும் உள்ளனர். இதனிடையே முகநூலில் மலர்ந்த காதலுக்காக அஞ்சு பாகிஸ்தான் சென்றுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞருடன் முகநூலில் அஞ்சுவுக்கு நட்பு மலர்ந்துள்ளது. நாளடைவில் காதலாக மாறியதால், அவரைச் சந்திப்பதற்காக பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவிலுள்ள கிராமத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்கு கடந்த ஜூலை 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. தனது பெயரையும் ஃபாதிமா என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக குழந்தைகளின் மீது ஏக்கம் அதிகமானதால், அவர் தனது கணவருடன் இந்தியாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்தியா செல்வதற்கான முறையான அனுமதிக்காக ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
இந்தியாவுக்குச் சென்று தனது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தான் திரும்பவே அவர் திட்டமிட்டுள்ளார். குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்கான தடையின்மை சான்றிதழுக்காக பாகிஸ்தான் அரசிடம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்துக்கு அனுமதி கிடைத்ததும் வாகா எல்லை வழியாகவே இந்தியாவுக்குச் சென்று குழந்தைகளுடன் பாகிஸ்தான் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.