தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் திஹார் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்ட்டு வருகிறது.
இதனிடையே சிசோடியா, ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் இன்றைய விசாரணையில், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், மணிஷ் சிசோடியா மீதான வழக்கை 8 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் விசாரணை காலதாமதமானால் சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.
முந்தைய விசாரணையில், 'மணீஷ் சிசோடியாவை காலவரையின்றி காவலில் வைத்திருக்க முடியாது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், குற்றச்சாட்டு மீதான வாதங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்' என்று சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.