ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றும் வரை எங்களின் இந்த சைக்கிள் பேரணி தொடரும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மாநிலம் முழுவதும் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகிறார். இதுவரை சுமார் 5,000 கிமீ தூரம் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று லக்னெளவை அடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த சைக்கிள் பயணம் பாஜகவை அகற்றும். இதற்காக மக்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எங்கள் கட்சியினரும் தனித்தனியாக அந்தந்த மாவட்டங்களில் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களும் அதிகளவில் இதில் கலந்துகொள்கின்றனர். எங்களுக்கு அதிக ஆதரவு கிடைத்து வருகிறது.
சமூக நீதி மற்றும் உரிமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. பாஜக சதித்திட்டங்களில் ஈடுபடுகிறது. நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே இந்த பயணம்' என்று பேசினார்.
மேலும் ஆந்திர ரயில் விபத்து குறித்துப் பேசிய அவர், ''அசம்பாவித சம்பவங்கள் குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் இருப்பதாகக் கூறும் அரசாங்கத்தின் பொய்யான கூற்றுக்களை இந்த சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது' என்று மத்திய அரசை குற்றம்சாட்டினார்.