மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞரும் நாட்டின் முதன்மை வழக்குரைஞர்களில் ஒருவருமான ஹரீஷ் சால்வே 3வது திருமணம் செய்துகொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை (செப். 3) லண்டனில் நடைபெற்ற அவரின் திருமணத்தில் இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சுனில் மிட்டல், கோபி இந்துஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1999ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்தவர் ஹரீஷ் சால்வே. 68 வயதாகும் இவர், பல்வேறு சர்வதேச வழக்குகளில் வாதாடியுள்ளார்.
பாகிஸ்தான் நீதிமன்றத்தால் உளவாளி என குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதிட்டுள்ளார். இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.1 மட்டுமே பெற்றார். அதோடு மட்டுமின்றி டாடா குழுமம், ரிலையன்ஸ் குழுமம் போன்ற தொழிலதிபர்களுக்கும் சால்வே வழக்குரைஞராக உள்ளார்.
வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே தனது முதல் மனைவி மீனாட்சி என்பவரை 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து கரோலீன் புரோசார்ட் என்பவரை மணந்தார்.
தற்போது 3வது முறையாக திரானா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சுனில் மிட்டல், கோபி இந்துஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிசிசிஐ முன்னாள் தலைவர் லலித் மோடி தனது காதலியும் மாடல் அழகியுமான உஜ்வாலாவுடன் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.