சந்திரயான் -3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (செப். 4) அறிவித்துள்ளது.
ஏற்கெனவே உறக்கநிலையில் (sleep mode) உள்ள ரோவருக்கு அருகே விக்ரம் லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், விக்ரம் லேண்டர் இன்று 8:00 மணி அளவில் உறக்க நிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன், ChaSTE, RAMBHA-LP மற்றும் ILSA ஆகிய கருவிகளும் செயல்பாட்டை நிறுத்தின. அவற்றில் சேகரிக்கப்பட்ட தரவுகள் பூமிக்குக் கிடைத்துவிட்டன. அனைத்து கருவிகளும் அணைக்கப்பட்டுள்ள நிலையில், லேண்டர் ரிசீவர்கள் மட்டும் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
பிரக்யான் உறங்கிவரும் இடத்தினருகே விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி நிலவில் சூரிய ஒளி வந்ததும் மீண்டும் செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக விக்ரம் லேண்டரை 40 செ.மீ உயர்த்தி, 30-40 செ.மீ. தொலைவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் மீண்டும் பாதுகாப்பாக இஸ்ரோ தரையிறக்கியது. இந்த சோதனையில் அனைத்து கருவிகளும் சிறப்பாக செயல்பட்டதாக இஸ்ரோ குறிப்பிட்டது.