ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கேரள புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல திரிபுராவில் போக்ஸநகர், தன்புர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் உத்தரகண்ட் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டியின் மகன் வெற்றி! புதிய சாதனை!!
ஜார்க்கண்ட் மாநில டும்ரி தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பீபி தேவி(1,35,480) வெற்றி பெற்றுள்ளார். இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி வேட்பாளர் யசோதா தேவியை(1,18,380) விட 17,000 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
மேற்குவங்கம் தூப்குரி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் பாஜக வேட்பாளர் தபஸி ராயைவிட 4,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரகண்ட் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வதி தாஸ் 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் கோசி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.