தில்லியில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாட்டில் ஒருமனதுடன் கூட்டறிக்கை வெளியிட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
தில்லியில் இன்று தொடங்கிய ஜி20 மாநாடு நாளையும் (செப்.10) தொடரவுள்ளது. இதற்காக உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் தில்லிக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் உக்ரைன் - ரஷியா போர் விவகாரத்தில் உறுப்பு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. ரஷியாவைக் கண்டித்து பிரகடனம் வெளியிட வேண்டும் என உறுப்புநாடுகள் கோர, சீனாவும் ரஷியாவும் உடன்படாமல் மறுப்பு தெரிவித்தன.
அதனால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிட வேண்டியது இந்தியாவுக்கு பெரும் பொறுப்பாக இருந்தது.
இந்நிலையில், உக்ரைன் - ரஷியா விவகாரத்தில் உடன்பட இழுபறி நீடித்துவந்த நிலையில், ஒருமனதாக கூட்டறிக்கை வெளியிட உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
கூட்டறிக்கையின் சிறப்பம்சங்கள்:
உக்ரைன் போர் விளைவாக உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உலக வணிக வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து பலமுனை வணிக கட்டமைப்பை உருவாக்குவது அவசியமானது.
நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்.
பிற நாடுகள் மீதான அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.
உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய வேறுபாடுகளைக் கடந்து இணைய வேண்டும்.
அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தை முழு மனதுடன் எதிர்க்க வேண்டும்.