புது தில்லி: புது தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரகதி அரங்கத்துக்கு வருகை தரும் உலக தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பனை அளித்து வருகிறார்.
பிரகதி அரங்கத்துக்குள் வரும் உலக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக வரவேற்று வருகிறார். ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் கோயிலின் சக்கரத்தின் புகைப்படம் பின்னணியில், இருக்கும் இடத்தில் பிரதமர் தலைவர்களை வரவேற்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பின்னணியில் உள்ள கோனார்க் சக்கரத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிறார்.
உலகத்தலைவர்களை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் தனித்தனியாக புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை காலை தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் தில்லி பிரகதி அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று காலை நேரில் வந்து ஆய்வு செய்தார். பிறகு, பாரத் மண்டபம் பகுதியிலும் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடன் வந்தார்.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி முன் பாரத் என பெயர் பலகை
இன்று தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் நடத்தவுள்ளார்.
சனிக்கிழமை இரவில் குடியரசுத் தலைவா் சாா்பில் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று, ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு தலைவா்கள் மரியாதை செலுத்தவுள்ளனா்.
அதே நாளில், நிலையான-சமத்துவம்கொண்ட ‘ஒரே எதிா்காலம்’, ஒற்றுமை நிறைந்த ‘ஒரே குடும்பம்’, ஆரோக்கியமான ‘ஒரே பூமி’க்கான கூட்டுப் பாா்வையை தலைவா்கள் பகிா்ந்து கொள்வா் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளார்.