புது தில்லி: நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்று ஜி20 உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புது தில்லியில் அமைந்துள்ள பிரகதி அரங்கில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜி20 உச்சி மாநாடு சனிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கியது.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்: பிரதமர் மோடி முன் பாரத் என பெயர் பலகை
உச்சி மாநாட்டின் தொடக்கத்தில், மொராக்கோவில் நேரிட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்க்கும் நடைமுறை நிறைவு பெற்று, ஜி20 அமைப்பில் 21வது நாடாக ஆப்ரிக்க யூனியன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உச்சி மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று கூறினார்.
பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்.
போரினால் உலகளவில் இழந்த நம்பத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். வளமான எதிர்காலத்துக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையே நாம் உலக அரங்கில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த இக்கட்டான நேரத்தில், மொராக்கோவுக்குத் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் துவக்க உரையைத் தொடர்ந்து, பல்வேறு நாட்டுத் தலைவர்களும் உரையாற்றி வருகிறார்கள்.