மும்பை: மும்பை - ஐஐடியில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில், வெளிநாட்டு நிறுவனத்தில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.3.7 கோடி ஊதியத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு ரூ.2.1 கோடியாக இருந்தது.
இதன் மூலம், மும்பை - ஐஐடி மாணவர்களில் அதிகபட்ச ஆண்டு வருவாயில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த ஆண்டு அதிகபட்சமாக உள்நாட்டில் ஆண்டுக்கு ரூ.1.8 கோடி ஊதியத்தில் மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டு அது ரூ.1.7 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும், தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் துறையில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறைந்துள்ளது. இந்த ஆண்டு வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ஆண்டுக்கு ரூ.21.8 லட்சம் ஆக உள்ளது.
சுமார் 300 வேலை வாய்ப்புகள் இந்த முகாமில் இருந்தன. இதில் 194 இடங்கள் மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டைக் காட்டிலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் இந்த ஆண்டு குறைந்திருந்ததாகவே கூறப்படுகிறது.