கேரள மாநிலத்தில் 4-வது நாளாக நிபா வைரஸ் தொற்று எதுவும் பதிவாகாததால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்தனர்.தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
நிபா தொற்றின் பரவல் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளத்தில் தொடர்ந்து 4-வது நாளாக புதியதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் உறுதியாகாததால், விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது. அதன்படி ஒன்பது பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து கேரளத்தில் மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், இரவு 8 மணி வரை கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கீதா தெரிவித்தார்.
மேலும், முகக்கவசம், சானிடைசர்கள் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மற்ற கட்டுப்பாடுகள் தொடரும்.
நிபா பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்கள் சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட காலம் வரை தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.