
கேரளத்தின், கோழிக்கோட்டில் கடந்த ஒரு வாரமாக புதிதாக நிபா காய்ச்சல் வழக்குகள் பதிவாகாத நிலையில் இன்று முதல் கல்வி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
மாநிலத்தில் நிபா காய்ச்சல் பரவியதையடுத்து செப்.12-ம் தேதி முதல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. செப்.14 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் புதிதாக நிபா காய்ச்சல் பதிவாகாத நிலையில், இன்று முதல் கோழிக்கோட்டில் வழக்கமான வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முகக் கவசம் அணியவும், கை சுத்தத்திரவத்தை பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நிபா காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 24-ம் தேதி நிலவரப்படி, 915 பேர் கண்காணிப்பில் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் அதிக ஆபத்து பிரிவில் இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 377 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவர்களில் 363 பேரின் முடிவுகள் எதிர்மறையாக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கீதா முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.