தில்லியின் போகல் பகுதியில் உள்ள நகைக் கடையில் ரூ.20 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி போகல் பகுதியில் உள்ள உம்ராவ் சிங் ஜூவல்லா்ஸ் நகைக் கடையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அடையாளம் தெரியாத மூன்று பேர், அறையை துளையிட்டு இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர். இது தேசியத் தலைநகரில் பதிவான மிகப்பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஒன்றாகும்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமைக்கு இடையில் நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உம்ராவ் சிங் ஜூவல்லா்ஸ் கடை திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கடையைத் திறந்து பார்த்தபோது, சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.