மத்தியப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றிவாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி பாஜக 161 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக முன்னிலை பெற்றது. தொடர்ந்து வாக்குப்பெட்டி வாக்குகள் எண்ணிக்கையிலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்றிருந்த பாஜக, 1 மணி நிலவரத்தில் 161 இடங்களில் முன்னிலை பெற்றது.
பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 66 இடங்களிலும், பிஎஸ்பி 2 தொகுதிகளிலும் பாரத் ஆதிவாசி கட்சி ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில், வெற்றிவாய்ப்புக்காக 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தற்போது பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால், பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.