மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சோரம்தங்கா.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் சோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. சோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதையடுத்து மிசோரம் முதல்வர் பதவியில் இருந்து சோரம்தங்கா ராஜிநாமா செய்தார். இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் ராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார்.
கட்சியின் மூத்த துணைத் தலைவரான டான்லுயாவுக்கு அவர் அனுப்பியுள்ள ராஜிநாமா கடிதத்தில், “சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எம்.என்.எஃப் தவறிவிட்டது. கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு நான் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்கிறேன். எனது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மணிப்பூரில் 7 மாதங்களாக தொடரும் வன்முறை: மல்லிகார்ஜுன கார்கே