
புது தில்லி: நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் இரண்டு நபர்கள் குதித்து கோஷமெழுப்பிய சம்பவத்தில், ஆறு பேருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை வழக்கம் போல அவைகள் தொடங்கி, மக்களவையில் பூஜ்ய நேரம் நடந்துகொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த இரண்டு பேர், மக்களவை உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து, சர்வாதிகாரம் ஒழிக என கோஷமெழுப்பியபடி, மேஜை, நாற்காலிகளை தாவிக் குதித்து ஓடினர். அவர்களை அங்கிருந்த மக்களவை உறுப்பினர்கள் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவுநாளில் இந்த சம்பவம் நடந்திருப்பது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மக்களவைக்குள் அத்துமீறிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த அத்துமீறல் சம்பவம் மணிப்பூரில் நடக்கும் அடக்குமுறை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட இரண்டு பேர் இது குறித்து கோஷமெழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷமெழுப்பிய நீலம் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் பெண், நான் எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல, நான் ஒரு இந்திய மாணவர், மணிப்பூரில் மக்களையும் சிறு வியாபாரிகளையும் நசுக்குகிறார்கள். இதனை எதிர்த்தே இதைச் செய்தோம். அதனை நிறுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பினார்.
நாடாளுமன்றத்துக்குள் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவத்தில், 2 பெண்கள் உள்பட 4 பேர் பிடிபட்ட நிலையில் மேலும் இருவரை தேடி வருவதாகக் கூறப்படுகிறது. கைதான நால்வரிடமிருந்தும் செல்போன் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. குருகிராமில் தங்கியிருந்த 6 பேரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவர் மனோ ரஞ்சன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.