மேகாலயாவில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று மாநிலங்களவை எம்.பி.டெரிக் ஓபிரையன் கூறினார்.
ஜோவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
மாநிலத்தில் டிஎம்சிஆட்சி அமைத்த பிறகு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை 100 நாள்களுக்குள் நிறைவேற்றுவோம்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயாவில் வாக்காளர்களை கவரும் வகையில் இரண்டு பெரிய வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான மேகாலயா நிதிச் சேர்க்கை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவியும், ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், 21 முதல் 40 வயது வரையுள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவதாகவும் கட்சி உறுதியளித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி அடுத்த மாநிலத் தேர்தலில் வெற்றிபெற்றால், இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இருப்பினும் ஆளும் தேசிய மக்கள் கட்சி மற்றும் பாஜக ஆகியவை திரிணமூல் அளித்த இந்த தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்துள்ளன.
இதற்கு டெரிக் ஓபிரையன் மற்ற கட்சிகளின் கூற்றுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த திட்டங்கள் மூலம் மக்களுக்குச் சொந்தமானதை நாங்கள் திருப்பித் தருகிறோம் என்று கூறினார்.
மேலும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சாலைக் கட்டமைப்பு ஆகியவை மக்களின் அடிப்படைத் தேவைகள் என்றும், தற்போதைய ஆட்சியில் இவைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.