மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனை கட்சியின் பெயரும், வில்-அம்பு சின்னத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கி அங்கீகரித்துள்ளது.
சிவசேனை பெயர் மற்றும் கட்சி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பினர் விடுத்த கோரிக்கையை இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.
எனினும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும் காப்பாற்றிக்கொள்ள உத்தவ் தாக்கரே தரப்பு முயன்றது. ஷிண்டே தரப்பும் சின்னத்தைக் கைப்பற்ற நினைத்ததால், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், சிவசேனையின் சின்னமாக வில் - அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
ஷிண்டே தரப்புக்கு இரு வாள்கள் - கேடயம் அடங்கிய சின்னத்தை ஒதுக்கியது. உத்தவ் தரப்புக்கு டார்ச்லைட் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர். எனினும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டது.