
தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று, 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பாஜக 104 வாா்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.
இந்நிலையில், மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு, மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்காக இன்று காலை புதிய மாமன்றக் கூட்டம் கூடியது.
இதையும் படிக்க | ஆம் ஆத்மி - பாஜக கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு: தில்லி மேயர் தேர்தலில் பரபரப்பு
அப்போது துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட 10 நியமன உறுப்பினர்களின் பதவியேற்புக்கு ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாஜக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் மோதலில் முடிந்ததால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.