பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
2002 குஜராத் கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையும், அப்போது அம்மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முஸ்லிம்கள் நிலை குறித்தும் ''இந்தியா: மோடி மீதான கேள்வி'' (பகுதி -1) என்ற தலைப்பில் பிபிசி நிறுவனம் ஆவணப்படத்தை கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பியது.
அதனைத் தொடர்ந்து யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த ஆவணப்படம், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விடியோ குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடித் தொடர்புள்ளதாக பிபிசி ஆவணப்படத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிட்டிஷ் எம்.பி. இம்ரான் ஹுசைன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டனின் நிலைப்பாடு மாறவில்லை. தெளிவானது. பிற உயிர்களை துன்புறுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மரியாதைக்குரிய மனிதர் மீது வைக்கும் கருத்துகளுக்கு உடன்படவில்லை எனக் குறிப்பிட்டு அமர்ந்தார்.