இந்திய குடியரசு நாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு நாள்களில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது.
அந்தவகையில் சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாள்களை டூடுல் மூலம் கூகுள் நிறுவனம் கொண்டாடியும் / அனுசரித்தும் வருகிறது.
நாடு முழுவதும் இன்று குடியரசு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கெளரவிக்கும் வகையில், பென்சில் வகை சித்திரமாக டூடுல் வெளியிட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பார்த் கோத்கர் இந்த டூடுலை வடிவமைத்துள்ளார். காகிதத்தை வெட்டி வடிவமைக்கப்பட்டதைப்போன்று டூடுல் உள்ளது. இந்த சிறப்பு டூடுலில் தில்லி ஆளுநர் மாளிகை, ராஜவீதி அணிவகுப்பில் இடம்பெறும் வாகனம், ராணுவ வீரர்களின் சாகசங்கள், இந்தியா கேட் போன்றவை இடம்பெற்றுள்ளது.