இறுதிக்கட்டத்தை நெருங்கும் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்!
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று (ஜனவரி 29) மீண்டும் ஸ்ரீநகரில் இருந்து தொடங்கினார்.
தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைப்பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அவரது நடைப்பயணம் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் இன்று காலை 10:45 மணிக்கு நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. இதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரிங்கா காந்தி கலந்து கொண்டு அவரும் நடைப்பயணம் மேற்கொண்டார். மேலும், காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரும் மூவர்ணக் கொடி மற்றும் காங்கிரஸ் கொடியினை கையில் ஏந்தியும் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி அவர் எப்போதும் அணிந்திருக்கக் கூடிய வெள்ளை நிற டி-சர்ட்டில் நடைப்பயணத்தை தொடங்கினார்.
இதையும் படிக்க: வினாத்தாள் கசிவு: குஜராத்தில் அரசுத் தேர்வு ஒத்திவைப்பு
இந்த நடைப்பயணம் ஸ்ரீநகரில் இருந்து 7 கிலோமீட்டர் சென்று சோன்வார் பகுதியை அடைய உள்ளது. அங்கு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு ராகுல் லால் சௌக் நகரை நோக்கி செல்லவுள்ளார். அங்கு அவர் மூவர்ணக் கொடியை ஏற்றவுள்ளார். அதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பின்னர், இந்த நடைப்பயணம் நேரு பூங்கா நோக்கி செல்லவுள்ளது. அத்துடன் 4080 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த நடைப்பயணம் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் நாடு முழுவதிலும் 75 மாவட்டங்களைக் கடந்து வந்துள்ளது. நாளை (ஜனவரி 30) கட்சி தலைமையகத்தில் ராகுல் காந்தி தேசியக் கொடியினை ஏற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து எஸ்கே மைதானத்தில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ள 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.