தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்ற நிகழ்ச்சியில் போடப்பட்டிருந்த பந்தலின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஷாஹ்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சில பெண்களுக்கு காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளிர் தினத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விழாவில், மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பலத்த காற்று வீசியதால், பந்தல் சரிந்து விழுந்தது.
கண்ணில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதுகாப்புக் கருதி அங்கு அமைக்கப்பட்டிருந்த விற்பனைக் கூடங்கள் மூடப்பட்டு, சற்று நேரம் பதற்றம் நிலவியது.