'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனு வருகிற 15 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது. இஸ்லாமிய சமூகத்தினரை கேவலமாக சித்திரித்துள்ளதாக இப்படத்தின் மீது கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனுவை ஏற்க மறுத்து கேரள உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
கேரள உயர்நீதிமன்றம் திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்று வருகிற மே 15 ஆம் தேதி விசாரிக்க பட்டியலிட்டுள்ளது.