அடுத்த 2-3 நாள்களுக்குள் கர்நாடகத்தில் எங்களுடைய அமைச்சரவை அமையும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது.
முதல்வர் பதவியை யாருக்கு வழங்குவது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | ராகுலுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!
சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தில்லியில் சந்தித்துப் பேசிய நிலையில் இன்று ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். எனவே, கர்நாடக முதல்வர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுரேஜ்வாலா, 'தற்போது கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று அல்லது நாளை முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். காங்கிரஸ் முடிவெடுக்கும் போது கண்டிப்பாக அதுகுறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். அடுத்த 48-72 மணி நேரத்தில் கர்நாடகாவில் புதிய அமைச்சரவை அமையும்' என்றார்.
இதையும் படிக்க | இதுவே காங்கிரஸின் நிலைமை: பசவராஜ் பொம்மை