தேர்தலில் பெரும்பான்மை பெற்றும் முதல்வர் யார் என முடிவு செய்யவில்லை, இதுவே காங்கிரஸின் உட்கட்சி நிலைமை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது.
முதல்வர் பதவி யாருக்கு வழங்குவது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | ராகுலுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு!
சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தில்லியில் சந்தித்துப் பேசிய நிலையில் இன்று ராகுல் காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். எனவே, கர்நாடக முதல்வர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, 'பெரும்பான்மை பலம் கிடைத்தும் காங்கிரஸ் இன்னும் முதல்வர் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. இது கட்சியில் உள்கட்சி நிலைமையைக் காட்டுகிறது. அரசியலைவிட மக்களின் ஆசைகள் முக்கியம். காங்கிரஸ், முதல்வரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.