
தில்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முடிசூட்டு விழா முடிந்ததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யும் காட்சியையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஒரு மாதமாக மல்யுத்த வீரா், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிா்வாக குழுவுக்கான தோ்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதால் நிா்வாக வெற்றிடத்தை நிரப்ப ஒலிம்பிக் சங்கம் சாா்பில் தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த நட்சத்திரங்கள் அளித்த புகாரின்பேரில் போக்ஸோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மல்யுத்த நட்சத்திரங்களின் போராட்டத்துக்கு திரளும் பல்வேறு தரப்பு மக்களின் ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது.
राज्याभिषेक पूरा हुआ - 'अहंकारी राजा' सड़कों पर कुचल रहा जनता की आवाज़! pic.twitter.com/9hbEoKZeZs
— Rahul Gandhi (@RahulGandhi) May 28, 2023
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று பேரணி செல்ல முயன்றினர். அப்போது அவர்களை தடுத்தி நிறுத்தியபோது இருத்தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். நாங்கள் அமைதியாக பேரணி சென்றோம், ஆனால் அவர்கள் எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர் என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் தில்லி ஜந்தா் மந்தரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
முன்னதாக இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...