விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கொச்சி, தில்லி, பெங்களூரு விமான நிலையங்களில் டிஜிசிஏ அதிகாரிகள் கடந்த மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, விமானங்களை தாமதமாக இயக்குதல், விமானங்கள் ரத்து செய்யப்படுதல், விமான பயணிகளை விமானத்தில் ஏற்ற மறுப்பது, பயன்படுத்த முடியாத இருக்கைகளில் பயணித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காதிருத்தல் என ஏர் இந்தியா நிறுவனம் மீது புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கடந்த நவம்பர் 3 ஆம் தேதி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதையும் படிக்க | பிரதமர் மோடி மிகவும் பதற்றமாக இருக்கிறார்: அசோக் கெலாட்
விமான நிறுவனம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் பயணிகளின் விமான சேவையில் குறைபாடு இருந்ததால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.